தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்போம்! – சஜித் வாக்குறுதி
“தமிழ் மக்களை ஓரங்கட்டி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாது. தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் கண்டே தீருவோம். இதில் எந்த மாற்றமும் இல்லை.”
– இவ்வாறு உறுதிபடத் தெரிவித்தார் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் அறிக்கை தமிழ் மக்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது என்று தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பில் தங்களின் நிலைப்பாடு என்ன என்று சஜித்திடம் சர்வதேச ஊடகம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவர் பதிலளிக்கும்போது,
“தமிழ் மக்களை ஓரங்கட்டி ஜனாதிபதித் தேர்தலில் எவரும் வென்றுவிட முடியாது. மூவின மக்களையும் மதிக்கும் வகையில் – அவர்களுக்குச் சம உரிமையை வழங்கும் வகையில்தான் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும். இதற்கமையவே எமது தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படுகின்றது. தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை கண்டே தீருவோம். பிளவுபடாத – ஒருமித்த நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வை வழங்கியே தீருவோம். எமது ஆட்சியில் நல்லிணக்கமே நிலவும். சர்வாதிகாரத்தனத்துக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்” – என்று தெரிவித்தார்.