பாதுகாப்பைப் பலப்படுத்தும் பொறுப்பு பொன்சேகாவுக்கே! – அவர் முன்னிலையில் சஜித் உறுதி
“நான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதும் தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்தும் – உறுதிப்படுத்தும் பொறுப்பு முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படும்.”
– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
தனக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு, காலிமுகத்திடலில் இன்று நடைபெற்ற முதலாவது பிரதான பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேசிய பாதுகாப்பு குறித்து சொல்ல வேண்டும். அதனை உறுதிப்படுத்தப் போரை வெற்றி கொண்டவர்களுக்கே அந்தப் பொறுப்பை நாங்கள் வழங்க வேண்டும்.
தன்னைத் தியாகம் செய்து நேரடியாகப் போரை வென்ற பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு இந்த நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு வழங்கப்பட வேண்டும்.
அவர் கார்ட்போர்ட் வீரர் அல்ல. அவர் நாட்டுக்கு ஆற்றிய பணியைப் பெருமைப்படுத்தி நாங்கள் தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்தும் – உறுதிப்படுத்தும் பொறுப்பை அவரிடம் வழங்குவோம்.
எமது ஆட்சியில் எந்த அரசியல்வாதிகளுக்கும் ஜம்பர் அணிவிக்க மாட்டோம். அதை நீதிமன்றம் செய்யும். ஆனால், பயங்கரவாதத்தை நாங்கள் இல்லாமல் ஆக்குவோம்.
போதைப்பொருள் ஒழிப்பை நாங்கள் மேற்கொள்வோம். போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு உரிய தண்டனை வழங்குவோம்” – என்றார்.