எதிர்வரும் 28ஆம் திகதி பாரிய போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானம்!
ஆசிரியர்கள், அதிபர்கள் உட்பட உழைக்கும் வெகுஜனங்களின் செய்தியை அரசாங்கம் புரிந்து கொள்ளத் தவறினால், பாரிய அளவிலான ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.
அரசாங்கம் பதவி விலகக் கோரி நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்றதாக சங்கத்தின் பிரதம செயலாளரான ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு போன்றவற்றால் பொதுமக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
அரசாங்கம் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருப்ப தாகவும், தமது பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வுகளை வழங்க முடியாதிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏப்ரல் 28ஆம் திகதி வியாழக்கிழமை அனைத்துத் துறையினரும் இணைந்து பாரிய அளவில் ஒருநாள் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வங்கிகள், ரயில்வே, தபால், துறைமுகங்கள் மற்றும் நிர்வாகத் துறையில் உள்ள பிற குழுக்களின் ஊழியர்கள் போராட்டத்தை ஒரு படி மேலே கொண்டு செல்லும் வகையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.