ராஜபக்சக்களை மண்கவ்வச் செய்ய சஜித்தைக் களமிறக்குகிறார் ரணில்! – மாத்தறை மக்கள் பேரணியில் மங்கள முழக்கம்
“ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ நிச்சயம் போட்டியிடுவார். ராஜபக்சக்களைத் தோற்கடிக்கக்கூடிய வேட்பாளர் அவரே ஆவார்.”
– இவ்வாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவைக் களமிறக்குமாறு கோரி மாத்தறையிலுள்ள சனத் ஜயசூரிய மைதானத்தில் இன்று நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவு இல்லை. இன்னும் ஓரிரு நாட்களில் சர்ச்சைகளுக்கு முடிவு கட்டப்படும்.
அன்புக்குரிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸவின் பெயரை ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழிவார். அதனை சபாநாயகர் கரு ஜயசூரிய வழிமொழிவார்.
ராஜபக்சக்களின் போலிப் பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம். கடந்த நான்காண்டுகளில் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொருட்கள், சேவைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
சஜித்துக்காக திறைசேரியூடாக நிதி ஒதுக்கீடு செய்யும்போது அஞ்சவேண்டியதில்லை. அவர் களவாடமாட்டார். மக்களுக்கு உரிய வகையில் சேவைகள் சென்றடையும்” – என்றார்.