அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தியாவது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா கொடுப்பனவை வழங்குங்கள்!

“அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தியாவது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுங்கள்.”

– இவ்வாறு அரசிடம் கோரிக்கை விடுத்தார் பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன.

அவசரகாலச் சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றுவரும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என சில மாதங்களுக்கு முன்னர் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், அந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

கொடுப்பனவை வழங்க முடியாது என்பதில் துறைசார் அமைச்சர் உறுதியாக இருக்கின்றார். அமைச்சரவையில்கூட அனுமதி பெறமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியும் விசேட குழுவொன்றை அமைத்தார். ஆனால், எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.

எனவே, அவசரகாலச் சட்டத்திலுள்ள சரத்துக்களைப் பயன்படுத்தியாவது, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்துரையாடி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குக் கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *