அமைச்சர்கள் அதிகரிப்பை கூட்டமைப்பு ஆதரிக்காது! – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

“நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்படும், அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும், தீர்மான வரைவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்காது. 2015ஆம் ஆண்டு இதேபோன்றதொரு வரைவு முன்வைக்கப்பட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கை ரீதியாக அதனை எதிர்த்தது. தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறவேண்டிய தேவை இல்லை என்று நினைக்கின்றேன்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“கூட்டு அரசு அமைக்கப்பட்ட பின்னர் 2015ஆம் ஆண்டு இதே தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை எதிர்த்தது. நாம் கொள்கை ரீதியான நிலைப்பாட்டின் அடிப்படையில் எதிர்த்தோம்.

கூட்டு அரசு அமைக்கப்பட வேண்டும் என்றால் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்று எங்கும் சொல்லப்படவில்லை. ஏன் அமைச்சரவையை அதிகரிக்க வேண்டும்? இருக்கின்ற அமைச்சுக்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

அமைச்சராகித்தான் கூட்டு அரசை ஆதரிக்கவேண்டும் என்று இல்லையே. நாங்களும், மக்கள் விடுதலை முன்னணியும் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அரசின் சில விடயங்களுக்கு ஆதரவு வழங்குகின்றோம்.

2015ஆம் ஆண்டு நாங்கள் எடுத்த தீர்மானத்திலிருந்து மாறவேண்டிய தேவை இல்லை என்று நினைக்கின்றேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *