இந்த அரசைக் கவிழ்த்துவிட்டு அடுத்து நாம் என்ன செய்வது? – சிந்திக்க வேண்டும் என்கிறார் சம்பந்தன்

“இந்த அரசுக்கு நாங்கள் ஆதரவு வழங்குவதை எமது மக்கள் விரும்பவில்லை. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கோரி திருகோணமலையில் எனது வீட்டின் முன்னாள் இன்று மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். ஆனால், இந்த அரசைக் கவிழ்த்துவிட்டு நாம் என்ன செய்யப் போகின்றோம் என்று சிந்திக்க வேண்டும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘

“இந்த அரசு கடந்த அரசைவிடக் கொஞ்சம் பரவாயில்லை. கடந்த ஆட்சியின்போது இருந்ததைவிட இந்த அரசு மனித உரிமைகள் விடயத்தில் பரவாயில்லை. இந்த அரசைக் கவிழ்த்துவிட்டு நாம் என்ன என்ன செய்யப்போகிறோம். எனவே, நாங்கள் கவனமாகச் செயற்பட வேண்டும்.

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கோரி இன்று திருகோணமலையில் என் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடந்தது. எமது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லை. இந்த அரசுக்கு நாங்கள் ஆதரவளிப்பதை எமது மக்கள் விரும்பவில்லை. அரசு இதனைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.

பொது எதிரணியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வடக்கு மக்கள் பிரச்சினைக்குத் தீர்வு என்ன என்பதை முதலில் முன்வைக்க வேண்டும்.

அரசுக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து நாங்கள் சரியான தீர்மானம் எடுப்போம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *