கொவிட்-19 அபாயம் நீங்கும்வரை தேர்தல் அறிவிப்பை விடுக்கவேண்டாம்

கொவிட்–19 அபாயம் நீங்கும்வரை தேர்தல் அறவிப்பை விடுக்கவேண்டாம்: முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம்

இலங்கையில் கொவிட்–19 தொற்று முற்றாக நீங்கும் வரை பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்க வேண்டாமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாட்டில் சுமூகமான நிலைமை ஏற்படுவதற்கு முன்னர் தேர்தல் அறிவிப்பு விடுக்கப்படுமானால், அது சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடைபெறுவதை பெரிதும் பாதிக்கும் என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதன் ஏனைய உறுப்பினர்களுக்கு நேற்று வியாழக்கிழமை (16) அனுப்பிய கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;

21.03.2020 திகதியிடப்பட்ட 2167/12 இலக்க விசேட வர்த்தமானியில், கொவிட்–19 தொற்று காரணமாக 2020 ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்த முடியாது என தெரிவித்துள்ளீர்கள்.

பாராளுமன்ற சட்டத்தின் 24(3) என்று உறுப்புரைக்கு அமைவாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, தங்களால் மேற்கொள்ளப்பட்ட அந்த தீர்மானத்தை நாங்கள் மதிக்கின்றோம்.

உண்மையில், இலங்கையில் கொவிட்–19 தொற்றுநோய் காரணமாக தேர்தலுக்கான அறவித்தலை தங்களால் விடுக்க முடியாமலிருப்பது இன்னும் வலுவில் இருப்பதோடு, அற்றும் போய்விடவில்லை.

சுகாதாரப் பிரிவுக்கு பொறுப்பானவர்கள், பொலிஸார் உட்பட அதிகாரமளிக்கப்பட்டவர்கள் இந்த தொற்றுநோய் நாட்டிலிருந்து முழுவதுமாக நீங்கவிட்டதாகவும், பொதுமக்கள் அச்சமின்றி எங்கும் சுதந்திரமாக நடமாடமுடியும் என சரிவர உறுதிப்படுத்தும்வரை தேர்தலுக்கான திகதியை அறிவிக்க முடியாது என்பதே எங்களின் கரிசணையுடனான நிலைப்பாடாகும்.

உறுப்புரை 70(5)  (அ) அமைவாக மூன்று மாதங்களுக்குள் புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதற்காக தேர்தலை நடாத்த முடியாமல் இருப்பதையிட்டு, உயர் நீதிமன்றத்திடம் அபிப்பிராயம் கோருமாறு நீங்கள் ஜனாதிபதிக்கு அறிவித்திருந்ததையும் அதற்குரிய பிரதிபலன் கிட்டவில்லை என்பதையும் நாங்கள் அறிந்து வைத்துள்ளோம்.

நீதிமன்றத்திடமிருந்து தனியாட்களோ, கட்சிகளோ தீர்வொன்றை கோருவது ஒரு புறமிருக்க, இவ்வாறான சூழ்நிலையில் தேர்தலுக்கான அறிவிப்பை விடுப்பதற்கான தீர்மானம் எதையும் மேற்கொள்ளக்கூடாது என்ற கோரிக்கையை நாங்கள் உங்களிடம் முன்வைக்கிறோம். அவ்வாறான தேர்தல் சுதந்திரமானதாகவும் நேர்மையானதாகவும் இருக்காது.

விரைவில் கட்சி செயலாளர்களுடனான கூட்டமொன்றை நடாத்தி, இது தொடர்பிலும் ஏனைய விடயங்கள் தொடர்பிலும் ஆராயுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

ஊடகப் பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *