‘ராஜபக்சக்கள் கொலைச்சதி:’ விசாரணைகளை சர்வதேச பொலிஸாரிடம் ஒப்படைக்க மைத்திரி முடிவு!
முக்கிய பிரமுகர்களைப் படுகொலை செய்யும் சூழ்ச்சித் குறித்தான விசாரணைகளை, ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸாரிடம் ஒப்படைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
பிரதான ஆங்கில பத்திரிகையொன்று மேற்படி தகவலை இன்று வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் என்ற வகையிலேயே ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அவர் அறிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இதன்படி நாமல் குமார வெளியிட்ட படுகொலைச் சதித் திட்டம் தொடர்பான ஒலிப்பதிவுகள், ஆரம்ப விசாரணை அறிக்கைகள் ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸாருக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸார் குற்றவியல் விசாரணைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச உட்பட ராஜபக்ச குடும்பத்தை கொலைசெய்வதற்கு சூழ்ச்சி வகுக்கப்பட்டது. இதன் பின்னணியில் பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர தொடர்புபட்டுள்ளார் என கூறி முக்கிய தகவல்களை நாமல் குமார என்ற நபர் அம்பலப்படுத்தியிருந்தார்.
இவ்விவகாரம் தெற்கு அரசியலையே புரட்டிப்போட்டது. ஆட்சிமாற்றத்துக்குகூட இவ்விவகாரமே பிரதான காரணியாக அமைந்தது.