வென்றது ‘சுப்பர்ராங்’ விளையாட்டுக்கழகம்! – வெற்றிக்கிண்ணத்தை வழங்கினார் சுமந்திரன் எம்.பி.

பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக், வடமராட்சி கிழக்கு உதைப்பந்தாட்ட உப லீக் ஆகியவற்றின் அனுமதியுடன் ஆழியவளை அருணோதயா விளையாட்டுக்கழகம் நடத்திய ‘வடக்கு மாகாண ரீதியிலான விளையாட்டு விழா – 2019′ இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பிற்பகல் 2.30 மணிக்கு ஆழியவளை அருணோதயா விளையாட்டுக்கழக மைதானத்தில் கழகத்தின் தலைவர் சே.ஜெயச்சந்திரன் தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் கலந்துகொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் அ.சா.அரியகுமார், மருதங்கேணி பிரதேச செயலர் க.கனகேஸ்வரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ச.சுகிர்தன், கே.சயந்தன் மற்றும் மருதங்கேணி கோட்டக்கல்விப் பணிப்பாளர் ச.திரவியராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற உதைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டி இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பு சுப்பர்ராங் விளையாட்டுக்கழகமும் உடுத்துறை செந்தமிழ் விளையாட்டுக்கழகமும் இறுதிப்போட்டியில் மோதின. சுப்பர்ராங் விளையாட்டுக்கழக அணி தண்டை உதைமூலம் வெற்றிபெற்றது.

முதலிடம் பிடித்த புதுக்குடியிருப்பு சுப்பர்ராங் விளையாட்டுக்கழக அணிக்கு நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெற்றிக்கிண்ணத்தையும், பணப்பரிசிலையும் வழங்கிவைத்தார்.

இரண்டாம் இடத்துக்கு வந்த உடுத்துறை செந்தமிழ் விளையாட்டுக்கழக அணிக்கு நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் அ.சா.அரியகுமார், மருதங்கேணி கோட்டக்கல்விப் பணிப்பாளர் ச.திரவியராசா ஆகியோர் இணைந்து கெளரவிப்புக் கிண்ணத்தையும் பணப்பரிசிலையும் வழங்கிவைத்தனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *