இந்தியாவுக்கு முதல் வெற்றி! – தென்னாபிரிக்காவுக்கு மூன்றாவது தோல்வி

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றிபெற்றது.

12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 8 ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் இன்று நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இதன்படி, தென்னாபிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக குயின்டான் டி காக் மற்றும் அம்லா களமிறங்கினர். இதில் அம்லா 6 ஓட்டங்களிலும், குயின்டான் டி காக் 10 ஓட்டங்களிலும் பும்ரா வீசிய பந்தில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினர்.

பின்னர் களமிறங்கிய டு பிளிஸ்சிஸ் மற்றும் வான்டெர் துஸ்சென் சற்று நிதான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இதில் வான்டெர் துஸ்சென் 22 ஓட்டங்களிலும், டு பிளிஸ்சிஸ் 38 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து சாஹல் சுழலில் ஓரே ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய டுமினி 3 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பின் ஜோடி சேர்ந்த பெலக்வாயோ மற்றும் டேவிட் மில்லர் அணியைச் சரிவிலிருந்து மீட்கப் போராடினர்.

ஆனால், இந்த ஜோடியால் தொடர்ந்து சோபிக்க முடியவில்லை. இதில் டேவிட் மில்லர் 31 ஓட்டங்களிலும், பெலக்வாயோ 34 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுக்களைப் பறிகொடுத்தனர். அடுத்துக் களமிறங்கிய ரபடா மற்றும் கிறிஸ் மோரிஸ் அணியின் ஓட்டங்களை உயர்த்த தங்களது சீரான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இதில் கிறிஸ் மோரிஸ் 42 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களை எடுத்தது. கடைசியில் ரபடா 31 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

இந்திய அணியில் சிறப்பாகப் பந்து வீசிய யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுக்களை சாய்த்தார். பும்ரா மற்றும் புவனேஷ்வர்குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதன்மூலம் இந்திய அணிக்கு 228 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 228 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் ஷிகார் தவான், ரோகித் சர்மா ஆகியோர் முதலாவதாகக் களமிறங்கினர். இதில் ஷிகார் தவான் 8 ஓட்டங்களிலும், அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கப்டன் விராட் கோலி 34 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்ததாக ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல், ரோகித் சர்மா ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் அணியின் ஓட்ட எண்ணிக்கை மெதுவாக உயர்ந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோகித் சர்மா தனது அரைச் சதத்தை பதிவு செய்தார்.

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கே.எல்.ராகுல் 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக ரோகித் சர்மாவுடன், டோனி ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியில் ரோகித் சர்மா, 128 பந்துகளில் தனது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து அசத்திய இந்த ஜோடி, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. முடிவில் வெற்றிபெற 15 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் டோனி 34 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இறுதியில் ரோகித் சர்மா 122 ஓட்டங்களும், அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா 15 ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி 47.3 ஒவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 230 ஓட்டங்களை எடுத்தது.

தென்னாபிரிக்கா அணியின் சார்பில் அதிகபட்சமாக ரபடா 2 விக்கெட்டுக்களும், கிறிஸ் மோரிஸ், பெலக்வாயோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இந்தத் தொடரில் முதல் வெற்றியைப் பெற்றுள்ளதுடன், தென்னாபிரிக்கா அணி மூன்றாவது தோல்வியைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *