மங்கள, ராஜித, சதுர ஆகியோரே காவியுடைகளின் அடுத்த இலக்கு! – கம்பஹா மாவட்ட விகாரைகளுக்கு வரத் தடை
அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன ஆகியோரை கம்பஹா மாவட்ட விகாரைகளுக்கும் மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கும் அனுமதிப்பதில்லை என கம்பஹா மாவட்ட பௌத்தசாசன பாதுகாப்புச் சபையின் விகாராதிபதி சங்கம் தீர்மானித்துள்ளது.
மகா நாயக்க தேரர்களை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார்கள் என்று கூறியே அவர்களை விகாரைகளுக்குள் அனுமதிப்பதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என கம்பஹா மாவட்ட பௌத்தசாசன பாதுகாப்பு சபையின் விகாராதிபதி சங்கத்தின் செயலாளர் தோரபிடியே ஆனந்த தேரர் இன்று தெரிவித்துள்ளார்.
“குறித்த அரசியல்வாதிகள் மூவரையும் கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள எந்தவொரு விகாரைகளுக்கும் அனுமதிக்க வேண்டாம். அதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் மதம் சார்ந்த எந்தவொரு நிகழ்வுகளுக்கும் அழைக்க வேண்டாம். இந்தத் தீர்மானமானது எதிர்வரும் காலங்களில் நாட்டில் உள்ள ஏனைய இடங்களிலும் அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.