வன்முறைகளைக் கட்டுப்படுத்த படையினருக்கு முழு அதிகாரம்! – பிரதமர் ரணில் அறிவிப்பு
நாட்டின் பல பாகங்களிலும் வன்முறைச் சம்பவங்கள் தலைவிரித்துள்ளமையை அடுத்து, அதனைக் கட்டுப்படுத்தப் பாதுகாப்புப் படையினருக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.
நேற்றிரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடமேல் மாகாணத்தில் ஏற்பட்ட பதற்றமான நிலைமை தற்போது பொலிஸ் மற்றும் இராணுவத்தால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் வன்முறைக்குச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றேன். பாதுகாப்பு மற்றும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டப் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தி ஸ்திரமற்ற நிலையை உருவாக்கச் சில குழுக்கள் முயற்சிக்கின்றன. அதுவே வடமேல் மாகாணத்திலும் இடம்பெற்றுள்ளது.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலையையும் ஊரடங்கு உத்தரவையும் மீறுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப் பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது” – என்றார்.