வாள் முதல் அமெரிக்க தயாரிப்பு துப்பாக்கி வரை பல்வேறுரக ஆயுதங்கள் சம்மாந்துறையில் மீட்பு

சம்மாந்துறை பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை ஆயுதங்களை, நேற்று (புதன்கிழமை) இராணுவத்தினர் கைப்பற்றினர்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்கம்பிட்டி – விளினையடி பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

நபர் ஒருவருக்கு சொந்தமான உபயோகப்படுத்தாத காணியொன்றின் புதைக்கப்பட்ட நிலையில், இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் பண்டிகை அன்று இலங்கையின் முக்கிய தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். அதனைத் தொடர்ந்து இலங்கையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே தேடுதல் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

என்னென்ன பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன?

  • எம்.பி 25 ரக அமெரிக்க தயாரிப்பு மைக்ரோ கைத்துப்பாக்கி – 01
  • 9 எம் எம் கைத்துப்பாக்கி – 01
  • பென் துப்பாக்கிகள் – 02
  • ஷாட்கண் (Shot gun) துப்பாக்கி தோட்டாக்கள் – 08
  • ரி 56 ரக துப்பாக்கி ரவை கூடு – 01
  • தோட்டாக்கள் – 170
  • வயர் தொகுதி – 23
  • ஒவ்வொன்றும் 25 கிலோகிராம் எடைகொண்ட அமோனியம் நைட்ரேட் உரப்பைகள் – 04
  • ராணுவ மேலங்கி – 01
  • கைத்துப்பாக்கி தோட்டாக்கள்
  • கைப்பற்றப்பட்ட இந்தப் பொருட்கள் கிறீஸ் பூசப்பட்டு நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்தன.

    இதேவேளை வீடொன்றிலிருந்து வாள் ஒன்றும், கல்குவாரி ஒன்றில் இருந்து 200 ஜெலட்டின் குச்சிகளும் மீட்கப்பட்டன.

    பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் இத்தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *