தௌஹீத் ஜமா அத்துடன் கோட்டாவுக்கு தொடர்பில்லை – பொன்சேகா
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் பலிகடாக்களாக்கப்பட்டுள்ளனர் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
அத்துடன், குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புபட்ட தௌஹீத் ஜமா அத்துடன் கோட்டாபய ராஜபக்சவுக்கு தொடர்பிருக்கின்றது என ராஜித சேனாரட்ன முன்வைத்த குற்றச்சாட்டையும் பொன்சேகா நிராகரித்தார்.
அஸ்கிரிய, மல்வத்த பீடங்களுக்கு இன்று பயணம் மேற்கொண்டிருந்த பொன்சேகா, இறைவழிபாட்டின் பின்னர் – மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பொன்சேகா,
” நாட்டில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலானது நீண்ட நாட்கள் திட்டமிடப்பட்டதாகவே இருக்கவேண்டும். அடிப்படைவாத அமைப்புடன் கோட்டாபயவுக்கு தொடர்பிருக்கும் என நான் நம்பவில்லை.
குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் இருக்கின்றனர். ஆனால், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தவர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் இது விடயத்தில் பலிகடாக்களாக்கப்பட்டுள்ளனர்” என்றும் கூறினார்.