தொடர் குண்டு வெடிப்புகள் – அரசே பொறுப்புகூறவேண்டும்! மஹிந்த வலியுறுத்து
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்புகூற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” போர் முடிவடைந்து 9 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இப்படியானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் 30 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதுடன், அவர்களின் உறவினர்களுக்கும் அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது குறித்து நாட்டு மக்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்குமானால், அனர்த்தங்களை தவிர்த்திருக்கலாம். எனவே, குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.
இது தேசிய பிரச்சினையாகும். எனவே, எதிர்க்கட்சி என்ற வகையில் அரசால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை வழங்குவோம்.” என்றார்.