பாடசாலையினுள் மாணவி உயிரோடு எரித்துக்கொலை!
பங்களாதேஸில் தலைமை ஆசிரியர் மீதான பாலியல் முறைப்பாட்டை மீளப்பெற மாணவி மறுத்ததால், அவர் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
பங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள சிறிய நகரம் பெனி. இந்த நகரை சேர்ந்த நஸ்ரத் ஜகான் ரபி என்ற 19 வயது இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த தனியார் பாடசாலையில் பயின்று வந்துள்ளார்.
இந்தநிலையில், கடந்த மாத இறுதியில் பாடசாலையின் தலைமை ஆசிரியர் தன்னை அவரது அறைக்கு அழைத்து தவறான எண்ணத்தில் தொட்டு பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக குறித்த மாணவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்பேரில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமை ஆசிரியரைக் கைதுசெய்தனர்.
இதையடுத்து அந்தப் பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் சிலரும், உள்ளூர் அரசியல்வாதிகளும் இணைந்து, தலைமை ஆசிரியரை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் குறித்த மாணவி பொய்யான முறைப்பாட்டை அளித்துவிட்டதாக குற்றம் சாட்டினர்.
இந்தநிலையில், தலைமை ஆசிரியர் மீது முறைப்பாடு செய்த 11 நாட்களுக்குப் பிறகு தேர்வு எழுதுவதற்காக அந்த மாணவி பாடசாலைக்கு சென்றார்.
அப்போது, அவரின் தோழி ஒருவர், அவரை பாடசாலையின் மேல் மாடிக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு பர்தா அணிந்திருந்த 5 பேர், நஸ்ரத் ஜகான் ரபியை சூழ்ந்துகொண்டு தலைமை ஆசிரியர் மீதான முறைப்பாட்டை மீளப்பெறும்படி மிரட்டினர்.
அதனை ஏற்க மறுத்ததால் அவர் மீது மண்எண்ணெயை ஊற்றி தீவைத்தனர்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விவகாரம் பங்களாதேஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.