எல்லா விமர்சனங்களுக்கும் மேதின உரையில் பதிலடி கொடுப்பார் தொண்டா!
” அனைத்துவிதமான குற்றச்சாட்டுகளுக்கும் மேதின உரையில் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பி. பதிலடிகொடுப்பார்.” என இ.தொ.கா. வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.
இ.தொ.காவின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானை இலக்கு வைத்து, அரசியலுக்கு அப்பால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பழக்கவழக்கங்கள் தொடர்பிலும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
தொழிலாளர் தேசிய சங்கத்தினாலும், இதர அமைப்புகளாலும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு, இதொகாவின் இரண்டாம்நிலை அரசியல்வாதிகள் பதிலடி கொடுத்தாலும், தலைவர் மௌனம் காத்து வருவது குறித்து பலகோணங்களில் கேள்விகள் எழுப்படுகின்றன.
அத்துடன், 80 வருடகாலப் பகுதிக்குள் இ.தொ.காவால் செய்யப்பட்ட சேவைகளை பட்டியலிடுமாறு அமைச்சர் திகாம்பரமும் சவால் விடுத்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்து இ.தொ.காவின் தலைவருக்கு நெருக்கமானவர்களிடம் வினவினோம்.
” அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. இதொகாவின் சேவைகள் எப்படிபட்டவை என்பது மலையக மண்ணுக்கும், மக்களுக்கும் நன்கு தெரியும். எதுஎப்படியிருப்பினும் தலைவரின் மே தின உரையானது, எல்லாவற்றுக்கும் பதிலடி கொடுப்பதாக அமையும் என நம்புகின்றோம்.” என்று தெரிவிக்கப்பட்டது.