உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க பணிப்பு!
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, “மில்கோ” மற்றும் “ஹைலன்ட்” நிறுவனங்களின் பால் உற்பத்திப் பொருட்களை அதிகரிப்பதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக, விவசாய அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பால் தொழிற்சாலைகளுக்குக் கிடைக்கும் பாலின் அளவை அதிகரித்து, சேர்த்து வைப்பதற்கும் உடனடி தயாரிப்பான ஐஸ்கிரீம் மற்றும் யோகட் ஆகியவற்றின் எண்ணிக்கையை இருபதாயிரமாக அதிகரிப்பதற்கும், அமைச்சரினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பிலான சிக்கல்களினால் “மில்கோ” நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் விற்பனைகள் அதிகரித்துள்ளதாகவும்,
இதனால் சந்தையில் பால்மாவிற்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய நிலைப்பாடுகளைக் கருத்திற்கொண்டே உள்ளூர் பால்மா உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“மில்கோ” நிறுவனத்தின் உற்பத்தி தொடர்பில், அதிகாரிகள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வழமையாகக் கிடைக்கும் பாலின் அளவு குறைந்துள்ளதாகவும், வரட்சியான கால நிலை காரணமாக அது ஒரு இலட்சம் லீற்றராகக் குறைவடைந்துள்ளதாகவும் இதேவேளை, “அம்பேவெல” பால் தொழிற்சாலைக்கு நான்கு இலட்சம் லீற்றர் வரையிலான பால் தேவைப்படுவதாகவும் இதன் போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிணங்க, எதிர்பார்த்துள்ள இலக்கை அடைவதற்கு, சகல அதிகாரிகளும் ஒத்துழைக்க முன்வர வேண்டுமென்றும், இதற்கு முரணாகச் செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.