டில்லியில் முக்கியஸ்தர்களுடன் சுமந்திரன் மிக விரிவான பேச்சு!

சார்க் நாடாளுமன்றக் குழுவின் நான்கு நாள் கருத்தரங்கில் பங்குபற்றுவதற்காக புதுடில்லிக்குச் சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், அங்கு இந்திய அரசின் முக்கிய பிரதிநிதிகள் சிலருடன் அந்தரங்கப் பேச்சுகளில் ஈடுபட்டார் என அறியவந்தது.

இந்தியாவில் பொதுச் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்றமையால் அரசியல் தலைவர்கள் அனைவரும் பிரசார வேலைகளில் தீவிரமாக உள்ளனர். அதனால் அரசியல் தலைவர்களைச் சுமந்திரன் சந்திக்கவில்லை எனத் தெரிகின்றது.

எனினும், இந்திய அரசின் உயர்நிலை அதிகாரிகள், புலனாய்வுத்துறை உட்பட்ட அமைப்புக்களின் பிரதானிகள் போன்றோர் சுமந்திரனுடனுடன் பேச்சுக்ளில் ஈடுபட்டனர் என அறியவந்தது.

தெற்காசிய பிராந்திய பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உதவி மையத்தில் சார்க் நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு என நடத்தப்பட்ட நிதி முகாமைத்துவம் தொடர்பான நான்கு நாள் கருத்தரங்கில் பங்குபற்றுவதற்காகவே சுமந்திரன் புதுடில்லி சென்றிருந்தார். நேற்று மாலை அவர் கொழும்பு திரும்பினார்.

அவருடன் இந்தக் கருத்தரங்கில் ஜே.வி.பியின் சுனில் ஹந்துன்நெத்தி எம்.பி. மற்றும் சுஜீவசேனசிங்க எம்.பி. ஆகியோரும் புதுடில்லி சென்றிருந்தனர்.

புதுடில்லியில் இந்திய அதிகாரிகளுடன் தாம் பேச்சு நடத்தியமையை உறுதிப்படுத்திய சுமந்திரன் எம்.பி., எனினும், அவற்றின் விவரத்தை வெளியிடவில்லை.

ஆயினும், இந்தியத் தரப்பு தனது எதிர்பார்ப்புக்களைக் கோடி காட்டியதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *