மலையக வீட்டுத்திட்டத்தில் ‘மெகா’ ஊழல்! ஆதாரம் கைவசம் என்கிறது இதொகா!
” மலையக வீடமைப்புத்திட்டம் குறித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போலி பிரசாரம் முன்னெடுத்துவருகின்றது. எனது அமைச்சின் கண்காணிப்பின்கீழேயே மலையகத்தில் வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதைமீறு வேறுஎவரும் தலையிடமுடியாது.” என்று அமைச்சர் திகாம்பரம் கடந்த 24 ஆம் திகதி உரையாற்றியிருந்தார்.
இந்திய அரசின் 113 மில்லியன் ரூபா நிதி பங்களிப்புடன் கொத்மலை, எல்பொட தோட்டத்தில்
நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வின்போது, இ.தொ.காவின் தலைவரையும் மறைமுகமாக சாடி கருத்து வெளியிட்டிருந்தார்.
அமைச்சர் திகாவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இ.தொ.காவின் உபதலைவரால் இன்று ( 26) வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
” இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அயராத முயற்சியாலேயே, இந்திய அரசால் மலையகத்தில் 4 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்குரிய நிதியுதவி வழங்கப்பட்டது.
குறித்த வீடமைப்புத் திட்டத்தை வைத்து மாலைபோட்டு, பெயர் சூடிக்கொள்வதைத்தவிர, அமைச்சர் திகாம்பரத்தின் முயற்சியால் – இந்திய அரசின் பங்களிப்புடன் கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை திகா தரப்பினர் அறிவிப்பார்களா?
இன்று மேள தாளங்களுடனும்இ கூலி கொடுத்து கொண்டுவரப்பட்ட படை பட்டாளங்களுடன்இ திறப்புவிழா மற்றும் அடிக்கல் நாட்டப்படுகின்ற வீடுகளே இவையாகும்.
அமைச்சராக இருப்பதனால் அடிக்கல் நாட்டவும்இ திறப்புவிழா செய்யவும் அதிகாரம் இருப்பதை வைத்துக்கொண்டு இந்திய அரசாங்கம் வழங்கிய 4000ஆம் வீடுகளுக்கு பிதாமகனாக காட்டி மலையக மக்களை அமைச்சர் திகாம்பரம் ஏமாற்றிவருகிறார்.
மலையகத்தில் வரலாறு தெரிந்த – அறிவுள்ள பலர் இருக்கிறார்கள். முழு பூசணிக்காயையும் சோற்றிலே மறைக்க முடியாது. குயிலுக்கு கூடு கட்ட தெரியாது என்பதற்காக காக்கையின் கூட்டிலே முட்டையிட்டுவிட்டு காக்கையின் கூட்டிற்கும் சொந்தம் கொண்டாடும் நிலைக்கு மலையத்தில் கட்டப்படுகின்ற இந்திய அரசாங்கத்தின் வீடுகளின் நிலையும் தள்ளப்பட்டுவிட்டன.
அத்துடன்இ முழுக்க முழுக்க கட்சியை அடிப்படையாக கொண்டே பயனாளர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இதற்கு தம்மை நடுநிலையாளர்களாக காட்டிக்கொள்ளும் வீடமைப்பு முகவர் நிறுவனங்களும் துணைபோகின்றன.
இது தொடர்பில் இந்திய தூதரகத்திற்கு பல முறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்திய தூதரகத்தின் மீது நாம் பாரிய நம்பிக்கையை வைத்துள்ளோம்.
ஆனால் சில கட்சிகள் இந்திய வீடமைப்பு திட்டத்தை தமது சொந்த கட்சியின் திட்டமாக கருதி கட்சி வீடமைப்புத் திட்டமாக முன்னெடுத்துவருவதை இந்திய தூதரகம் பாராமுகமாக இருப்பது வருத்தமளிக்கிறது.
இலங்கை அரசாங்கத்தின் மூலமாக கட்டப்படுகின்ற சகல வீடுகளும் கடனுடன் கூடிய மானியங்களையும் உள்ளடக்கிய வீடுகளாகும். இது அமைச்சர் திகாம்பரத்தின் அமைச்சின் மூலமாக கட்டப்படுகின்ற வீடுகளக்கும் பொருந்தும். அமைச்சர் திகாம்பரத்தின் அமைச்சினூடாக கட்டப்படுகின்ற வீடுகள் எங்காவது முழுமையாக இலவசமாக கட்டப்படுகிறதா?
மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சினூடா கட்டப்பட்ட வீடுகள் தரமற்றவை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பல இடங்களில் இந்த வீடுகளை பொறுப்பேக்க மக்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த வீடுகள் கட்டப்பட்டதில் பலத்த ஊழல்கள் இடம்பெற்றுள்ளன. இதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும்.” என்றார்.