50 ரூபா கொடுப்பனவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளத்துடன், 50 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை இன்று ஒப்புதலளித்தது.
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ( 26) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போதே பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு – ஒருவருடகாலத்துக்கு 50 ரூபா கொடுப்பனவை வழங்கும் யோசனை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவால் முன்வைக்கப்பட்டு, அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது.
குறித்த கொடுப்பனவை வழங்குவதற்காக திறைசேரியிடமிருந்து 120 கோடி ரூபா கோரப்பட்டுள்ளது.
1000 ரூபா கோரிக்கை
பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு விடுத்திருந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இறுதியில் தமக்கு 20 ரூபா சம்பள உயர்வையே பெற்றுக்கொடுத்தது என தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர்.
எனினும், அடிப்படை நாட்சம்பளம் 500 ரூபாவிலிருந்து 750 ரூபாவரை அதாவது 40 சதவீதம் உயர்த்தப்பட்டது என இ.தொ.கா. தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இ.தொ.காவை கடுமையாக விமர்சித்த தமிழ் முற்போக்கு கூட்டணி, வரவுக்கான கொடுப்பானவாக 140 ரூபா பெற்றுக்கொடுக்கப்படும். அவ்வாறு இல்லாவிட்டால் அரசிலிருந்து வெளியேறவும் தயாரென குறிப்பிட்டிருந்தது.
எனினும், பிரதமருடன் நடைபெற்ற சந்திப்புகள் வெற்றியளிக்கவில்லை. பின்னர், பட்ஜட் ஊடாக 50 ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என கூறப்பட்டது. ‘பட்ஜட்’ ஊடாகவும் அது நடைபெறவில்லை. இறுதியில் கொடுப்பனவாகவே வழங்க முடிவெடுக்கப்பட்டது.