100 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் சிக்கியது ஈரான் கப்பல்! 9 பேர் கைது!! – இலங்கைப் படையினர் அதிரடி
பல கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஈரான் நாட்டு கப்பலொன்று தெற்குக் கடற்பரப்பில் வைத்து இன்று ( 24) சிறைபிடிக்கப்பட்டது. அத்துடன், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டனர் என சந்தேகிக்கப்படும் 9 ஈரானிய பிரஜைகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப் படையினரும், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பின்போதே கப்பல் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபர்களும் மடக்கிபிடிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு கடற்படையினரும் முழு ஒத்துழைப்பையும் வழங்கினர் என்று சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லத்தீப் தெரிவித்தார்.
ஹொரோயின் கடத்தலுக்கு ஆழ்கடல் மீன்பிடி கப்பலொன்றே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் சுமார் 600 கிரோகிராம் ஹொரோயின் இருந்திருக்கலாம் என பொலிஸார் ஆரம்பத்தில் சந்தேகித்தனர்.
100 கிலோ கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், ஏனையவை கடலில் கொட்டப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், கடலில் எதுவும் கொட்டப்படவில்லை என விசாரணைகளின்மூலம் தெரியவந்துள்ளது. இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் குறித்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு அழைத்துவரப்படவுள்ளனர்.
சட்டவிரோத போதைப்பொருட்களுக்கு முடிவு கட்டுவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் குறியாக இருக்கின்றனர்.
அத்துடன், விசேட அதிரடிப்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுக்கும் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தீடீர் சுற்றிவளைப்பு, கைது என அதிரடியாக தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் சட்டவிரோத போதைப்பொருளுடன் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாதாள கோஸ்டி உறுப்பினர்களும் கைதுசெய்யப்பட்டுவருகின்றனர்.