தாமரை மொட்டுக்குப் பதிலாக யாழில் ‘காதல் ரோஜா’வை பாடல் பரிசாக வழங்கிய தயாசிறி!
யாழில் நடைபெற்ற அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரான தயாசிறி ஜயசேகர, தமிழ் மொழியில் பாட்டுபாடி, கூட்டத்தில் பங்கேற்றிருந்தவர்களை மகிழ்வித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தமிழர் ஒன்றிய மாநாடு நேற்று ( 24) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலுள்ள சுதந்திரக்கட்சி செயற்பாட்டாளர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.
நிகழ்வில் தனது அரசியல் உரை முடிவடைந்த பின்னரே, பாட்டுபாடி அசத்தினார் தயாசிறி ஜயசேகர.
‘ரோஜா’ படத்துக்காக கவிஞர் வைரமுத்து எழுதிய, ஏ.ஆர். ரஹ்மானால் இசையமைக்கப்பட்ட
” காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே..
கண்ணீர் வழியுதடி கண்ணே..
கண்ணுக்குள் நீ தான் கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீ தான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்…..”
என்ற பாடலே பாடப்பட்டது.
தயாசிறி தமிழ்மொழியில் பாடும்போது கூட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் இன்பத்தில் மூழ்கினர். கைதட்டி பாராட்டு மழையும் பொழிவித்தனர்.
அரசியல்வாதியாக, சட்டத்தரணியாக பார்க்கப்படுகின்ற தயாசிறி, கலைத்துறையிலும் கால்பதித்தவர் எனலாம். சிங்கள தொலைக்காட்சியொன்றில் நடைபெற்ற, சிறந்த பாடகரை தெரிவு செய்வதற்கான நிகழ்விலும் இவர் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.