‘பட்ஜட்’ வாக்கெடுப்பு முடிந்த பின்பே மூன்றாம் சுற்று பேச்சு! சு.கவுக்கு பொறி வைத்தது மஹிந்த அணி!!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து புதிய அரசியல் கூட்டணியை அமைப்பது தொடர்பான இரண்டாம் சுற்று பேச்சும் வெற்றிகரமாக முடிவடைந்தது என்று சு.கவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி. இன்று (22) தெரிவித்தார்.

அத்துடன், இருதரப்புக்குமிடையிலான அடுத்த சுற்றுப்பேச்சு எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரண்டாக உடைந்துள்ளது.

கூட்டணி சிந்தனை உதயம்!

குறித்த கூட்டணிலிருந்து வெளியேறி புதிய கட்சியை ( ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன) மஹிந்த அணி ஆரம்பித்ததுடன், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களமிறங்கி வரலாற்று வெற்றியையும் பதிவுசெய்தது.

தற்போது மஹிந்தவும், மைத்திரியும் இணைந்துள்ளதால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ( வெற்றிலைச்சின்னம்) மீண்டும் பலப்படுத்துவதற்குரிய முயற்சியில் சு.க. இறங்கியது. எனினும், இதற்கு மஹிந்த தரப்பு பச்சைக்கொடிகாட்ட மஹிந்த தரப்பு மறுத்துள்ளது.

அத்தோடு தமது அணியில்வந்து இணையுமாறு சுதந்திரக்கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. தாமரை மொட்டியிடம் சரணடைவதற்கு சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலர் போர்க்கொடி தூக்கினர்.

இதையடுத்தே புதிய கூட்டணி அமைத்து பொதுசின்னத்தின்கீழ் தேர்தலில் போட்டியிடுவதற்குரிய முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரு தரப்புகளிலிருந்தும் பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்கப்பட்டுள்ளது.

2 ஆம் சுற்று பேச்சு….

இரண்டு குழுக்களுக்குமிடையிலான முதல்கட்ட உத்தியோகப்பூர்வ சந்திப்பு  , கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடந்த 14 ஆம் திகதி  நடைபெற்றது.

இந்நிலையில் இரண்டாம் சுற்று பேச்சு இன்று (21) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

சுதந்திரக்கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, உப தலைவர் திலங்க சுமதிபால, முன்னாள் பொதுச்செயலாளர் ரோஹன லக் ஷ்மன் பியதாச ஆகியோரும்,பொதுஜன பெரமுனவின் சார்பில் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், டளஸ் அழகப்பெரும எம்.பி. ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது அரசியல் கூட்டணிக்கான பூர்வாங்க பணி,  வரவு – செலவுத்திட்டம்மீதான இறுதி வாக்கெடுப்பு, அடுத்த தேர்தல் உட்பட மேலும் பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

குறிப்பாக ஏப்ரல் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள ‘பட்ஜட்’மீதான இறுதி வாக்கெடுப்பின்போது அதற்கு எதிராக வாக்களிக்குமாறு மஹிந்த தரப்பு பேச்சு குழு உறுப்பினர்கள், சு.க. உறுப்பினர்களிடம் கோரியுள்ளனர். இதற்கு சு.க. தரப்பிலிருந்து சாதகமான சமிக்ஞைகள் வெளிப்படுத்தப்பட்டதாக அறியமுடிகின்றது.

எனவே, பட்ஜட் இறுதிவாக்கெடுப்பில் சுதந்திரக்கட்சி எவ்வாறு செயற்படுகின்றது என்பதை அடிப்படையாக வைத்தே, கூட்டணி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாகவே மூன்றாம் சுற்றுபேச்சுக்கான திகதியாக 10 ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *