காருடன் மோதியது பஸ்; கணவன், மனைவி பலி!! – 8 பேர் படுகாயம்
கொழும்பு – கண்டி பிரதான வீதி, கேகாலை – கரடுபன சந்தியில், இன்று (20) பகல் இடம்பெற்ற விபத்தில், இருவர் பலியாகியுள்ளனர். அத்துடன் படுகாயமடைந்த எண்மர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த காரும் கொழும்பிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இவ்விபத்தில், காரின் பின்னால் பயணித்த வானொன்றும் காரின் மீது மோதியுள்ளது.
காரில் பயணித்த கணவன், மனைவியான கம்பஹாவைச் சேர்ந்த ஜயந்தி தினுகாடன் (வயது 61), ஆச்சாரிகே பாலனி சந்ரலதா (வயது 54) ஆகியோர் பலியாகியுள்ளதுடன் வானில் பயணித்த எண்மர் படுகாயமடைந்துள்ளனர்.
மேற்படி இருவரும் கண்டி தலதா மாளிகைக்குச் சென்றுவிட்டு கொழும்புக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோதே, விபத்தை எதிர்கொண்டுள்ளனர்.
பிரேத பரிசோதனைக்காக, கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.
விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியைக் கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.