அரசியல் தீர்வு கிடைக்கட்டும்! – சரா எம்.பி. பிரார்த்தனை
“தமிழர்களுக்குத் தேவையான அரசியல் தீர்வுகளை பிறந்திருக்கும் தைத்திருநாள் கொண்டுவரட்டும்” என்று தனது தைத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.
“அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம், காணி விடுவிப்பு, பௌத்த மயமாக்கல், புதிய அரசமைப்பு நிறைவேற்றம் என்று பலமுறைப் போராட்டத்தில் தமிழர் தாயகம் சிக்கித் தவித்து வருகின்றது.
தமிழர்களின் துன்பங்கள், அவர்களின் அரசியல் பிரச்சினைகள் என்பனவற்றில் சுமுகமான தீர்வு கிடைக்க இந்தத் தைத்திருநாள் வழிகாட்டட்டும்.
தமது சொந்த மண்ணில் அடுத்த வருடமாவது பொங்கலைக் கொண்டாட வேண்டும் என்று ஏங்கித் தவிக்கும் உறவுகளின் ஏக்கம், தவிப்பு என்பன மெய்ப்படட்டும்.
இலங்கையின் அனைத்து இன மக்களும் சுமுகமான முறையில் வாழ்வதற்கு வழிபிறக்கட்டும்” தனது வாழ்த்துச் செய்தியில் சரவணபவன் எம்.பி. மேலும் தெரிவித்துள்ளார்.