கைதான பாதாள கோஷ்டி உறுப்பினர்களிடம் பலகோணங்களில் விசாரணை! தேடுதல் வேட்டையும் தொடர்கிறது!!
வத்தளை – ஹேக்கித்த பகுதியில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட பாதாள கோஷ்டியை சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் திட்டமிட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் பலகோணங்களில் விசாரணைகள் நடத்தப்பட்டுவருகின்றன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ஹேக்கித்த பகுதியில் நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், ஹெரோயினுடன் பாதாள உலகக் குழுவை சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 17 கிலோகிராம் ஹெரோயின், ஒரு கிலோகிராம் கொக்கைன் மற்றும் 1.5 கிலோகிராம் ஹஷீஸ் போதைப்பொருள் ஆகியவற்றுடன் மைக்ரோ ரக துப்பாக்கிகள் இரண்டும் 05 கைத்துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், 15 போலி இலக்கத்தகடுகளும் ஒரு தொகை கைவிலங்குகளும் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்தது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஜம்பட்டா வீதி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் தேடப்பட்ட மலிது என்றழைக்கப்படும் சந்தேகநபரும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.