8 ஆம் திகதி அரசியல் மேடையேற கோட்டா மறுப்பு! அழைத்து வர மஹிந்த அணி கங்கணம்!!
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை எதிர்வரும் 8ஆம் திகதி அரசியல் மேடையேற்றுவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளது.
கோட்டாபய அரசியலுக்கு வருவாரா, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற நீண்ட இழுபறி அரசியல் அரங்கில் மட்டுமல்ல, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குள்ளேயும், ராஜபக்ச குடும்பங்களுக்குள்ளும் நீடித்து வந்தது.
இந்நிலையில்தான் சர்ச்சைகளுக்கு முடிவுகட்டி கோட்டாவே ஜனாதிபதி வேட்பாளர் என்பதை காண்பிப்பதற்குரிய முயற்சியில் கூட்டுஎதிரணி எம்.பிக்கள் சிலர் இறங்கியுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எதிர்வரும் 8ஆம் திகதி, கண்டி பொதுச் சந்தைப் பகுதியில் பாரிய பேரணி ஒன்றை நடத்தவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, பொதுஜன முன்னணியின் நிறுவுநரான பஸில் ராஜபக்ச ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்தக் கூட்டத்திலேயே கோட்டாபய ராஜபக்சவையும் மேடையேற்றும் முயற்சி நடக்கின்றது.
எனினும், இதற்கு கோட்டாபய இன்னும் பச்சைக்கொடி காட்டவில்லை என கூறப்படுகின்றது.அதேவேளை, குமார வெல்கமவையும் அன்றைய தினம் கூட்டத்தில் பங்கேற்க வைப்பதற்குரிய முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது.