ஜனாதிபதியைக் கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டப்படவில்லை! மகாநாயக்க தேரர்களிடம் ஐ.தே.க. விளக்கம்!!
ஜனாதிபதியைக் கொலைசெய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்படவில்லை என்று அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கண்டிக்கு இன்று ( 26) பயணம்மேற்கொண்ட அவர், அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெற்றார்.
அத்துடன், சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பிலும் மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடினார்.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
” சட்டம், ஒழுங்கு அமைச்சு என்னிடம் இருந்தபோது ‘பிரமுகர்கள் கொலை சூழ்ச்சி’ தொடர்பில் சுயாதீன விசாரணை முன்னெடுக்கப்பட்டது. எனக்கு தெரிந்தளவில், ஜனாதிபதியைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்படவில்லை.” என்று குறிப்பிட்டார்.
மகாநாயக்க தேரர்களுடனான சந்திப்பின்போதும் அமைச்சர் மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச உட்பட ராஜபக்ச குடும்பத்தை கொலைசெய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டது.
இதன்பின்னணியில் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பிரதிபொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா தொடர்புபட்டுள்ளார் என்று நாமல் குமார என்பவர் தகவல் வெளியிட்டார்.
இதையடுத்து இவ்விவகாரம் தெற்கு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆட்சிமாற்றத்துக்கும் வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.