ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்குமா ஐ.தே.க.?
2019 ஆம் ஆண்டுக்கான ‘பட்ஜட்’டில் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்கும் நோக்கம் ஐக்கிய தேசியக்கட்சிக்கு கிடையாது என இராஜாங்க அமைச்சர் ஹர்டி டி சில்வா இன்று (02) மாலை அறிவித்தார்.
ஜனாதிபதிக்குரிய நிதி ஒதுக்கீடுகளுக்கு (அவரின்கீழுள்ள அமைச்சுகள் உட்பட) எதிராக வாக்களித்து – அவற்றை தோற்கடிப்பதற்கு ஐ.தே.கவின் பின்னிலை எம்.பிக்கள் தயாராகவுள்ளனர் என்று முஜிபூர் ரஹ்மான் எம்.பி. இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டிருந்தார்.
கூட்டு எதிரணி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் எம்.பிக்கள் சிலரும், தமது முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனவும் அவர் கூறினார்.
அத்துடன், ஐ.தே.கவின் மேலும் சில பின்னிலை எம்.பிக்கள் இந்நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பில் ஐ.தே.கவின் நிலைப்பாட்டை வினவியபோதே கலாநிதி ஹர்ஷ டி சில்வா மேற்கண்டவாறு கூறினார்.
” ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இணைந்து ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் வாக்களித்தனர். எனவே, ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிப்பதற்கான தேவைப்பாடு ஐக்கிய தேசியக்கட்சிக்கு கிடையாது. அதை செய்யவும் மாட்டோம்.” என்றும் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.