பொறி வெடியில் சிக்கி ஒருவர் பரிதாபச் சாவு! – வவுனிக்குளத்தில் சோகம்
முல்லைத்தீவு, வவுனிக்குளத்தில் ஒருவர் பொறி வெடியில் சிக்கி உயிரிழந்துள்ளார். வவுனிக்குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற அவர் மானுக்காக வைக்கப்பட்டிருந்த பொறி வெடியில் அகப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாள்புரத்தைச் சேர்ந்த 34 வயதுடைய சுரேஸ்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.
வவுனிக்குளம், 6ஆம் கட்டையில் வவுனிக்குளத்தின் அலைகலைப் பக்கம் இந்தச் சம்பவம் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மாலை 6 மணிக்குப் பின்னர் அந்தப் பகுதிக்குச் சென்றவர்களே சுரேஸ்குமாரை மீட்டுள்ளனர். அவர் உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் மல்லாவி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். எனினும், அவர் முன்னரே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்தவரின் உடல், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் மல்லாவிப் பொலிஸா் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.