மக்கள் – இராணுவத்தினர் நேரில் பேசி கேப்பாப்பிலவு விவகாரத்துக்குத் தீர்வு! – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

“கேப்பாப்பிலவு விடயத்தில் மக்களும் இராணுவமும் பிரச்சினையை நேரில் பேசித் தீர்க்கும் ஒரு முடிவுக்கு வரவேண்டும். அதற்கான வழிமுறைகளை நாங்கள் செய்து கொடுத்துள்ளோம்.”

– இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் முல்லைத்தீவில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மக்கள் நடத்தும் இந்தப் போராட்டம் ஏனைய பிரச்சினைகளை விட ஏதோ ஒரு காரணத்துக்காகச் சர்வமயப்படுத்தப்பட்ட பிரச்சினையாக இருக்கின்றது.

இது 29 வருடப் போரும், 10 ஆண்டுகள் போருக்குப் பின் காலமும் அந்தக் காலத்தில் அநேகமானோர் வந்து கதைத்துப் போயுள்ள விடயமாகவும் உள்ளது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக நான்கு சந்திப்புக்களை மேற் கொண்டுள்ளேன். ஆனால், இன்றைய (நேற்று) சந்திப்பு எனது கடைசிச் சந்திப்பாக இருக்க வேண்டும்.

இன்றைக்கு நாம் ஒரு தீர்வுக்கு வந்துள்ளோம். மக்களும் இராணுவமும் இந்தப் பிரச்சினையை நேராகத் தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகளை நாங்கள் செய்து கொடுத்துள்ளோம்.

கேப்பாப்பிலவில் போராட்டம் நடத்தும் மக்களில் தலைமையேற்கும் 3 பேரை இன்று (நேற்று) சந்தித்தோம். அவர்களிடம் இந்தக் காணிப் பிரச்சினை தொடர்பாகக் கலந்துரையாடி தீர்வு வழங்கியுள்ளோம். அதற்கான வழிமுறைகளை அவர்கள் நாளையிலிருந்து (இன்று) ஆரம்பிப்பார்கள்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *