‘கொக்கெய்ன்’ பாவிக்கும் எம்.பிக்கள்! பெயர்ப்பட்டியல் இன்னும் கிடைக்கவில்லை!!

கொக்கெய்ன் போதைப்பொருள் பாவிப்பதாகக் கூறப்படும்  அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் குறித்த பெயர்ப்பட்டியல்  தனக்கு இன்னும்  கிடைக்கவில்லை என்று சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்றம் இன்று (21) முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்புவேளையிலேயே மேற்கண்டவாறு கூறினார் கருஜயசூரிய.

” அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர் என சபையில் நேற்று (20) கருத்துகள் முன்வைக்கப்பட்டன. ரஞ்சன் ராமநாயக்கவால் பெயர்பட்டியல் வெளியிடப்பட்டது என்றெல்லாம் கூறப்பட்டது.

ஆனால், பெயர்ப்பட்டியல் வழங்கப்படவில்லை என அப்போது சபைக்கு தலைமைவகித்த பிரதி சபாநாயகர் அறிவித்தார். குறித்த பெயர்ப்பட்டியல் இன்னும் என்னிடம் கையளிக்கப்படவில்லை.” என்றும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

அமைச்சர்கள்  உட்பட அரசியல்வாதிகள் சிலர் கொக்கெய்ன் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர் என்று ஆளுங்கட்சி உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க எம்.பி. அண்மையில் வெளியிட்ட கருத்து தெற்கு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும், பெயர்ப்பட்டில் வெளியிடப்படவேண்டும் என்றும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

‘கொக்கெய்ன்’ விவகாரம் நேற்றைய சபை அமர்விலும் சூடுபிடித்தது. எம்.பிக்கள் மரபணுபரிசோதனைக்குட்படுத்தப்படவேண்டும் என்றுகூட வலியுறுத்தப்பட்டிருந்தது. விசாரணைக்குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே தன்னிடம் இன்னும் பெயர்ப்பட்டியல் கையளிக்கப்படவில்லை என்று சபாநாயகர் இன்று அறிவித்தார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *