சவூதி அரேபியா இளவரசருக்கு இந்தியாவில் உற்சாக வரவேற்பு!

சவூதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், முதலாவது அரசு முறை பயணமாக பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியாவில் இரண்டு நாட்கள் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றார்.

பாகிஸ்தான் பயணத்தை நிறைவு செய்து தனி விமானம் மூலம் இன்று இரவு டில்லி வந்து சேர்ந்த சவூதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானை டில்லி விமான நிலையத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உற்சாகமாக வரவேற்றார். வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங்கும் உடனிருந்தார்.

பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்களை சவூதி இளவரசர் சந்தித்துப் பேசுகின்றார்.

இந்தச் சந்திப்பின்போது, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவான பேச்சு நடக்கின்றது.

பட்டத்து இளவரசரின் இந்திய வருகையால், இந்தியா – சவூதி இடையிலான உறவுகள் மேலும் வலுவடையும் வரலாற்று சிறப்பு மிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான சவூதி தூதர் சவுத் முகமது அல் சதி கூறினார்.

வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பான எங்கள் பொதுவான நாட்டத்தின் அடிப்படையில் மிகவும் முக்கியமான கூட்டாளியாகவும், மதிப்பு மிக்க நண்பராகவுமே இந்தியாவை சவூதி அரேபியா பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சவூதி பட்டத்து இளவரசரிடம் பாகிஸ்தான் ஊக்குவிக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் பற்றி இந்தியா எடுத்துரைக்கும் என்று தெரிகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *