ரணிலை நரியுடனும், கூட்டமைப்பு எம்.பிக்களை பிச்சைக்காரர்களுடனும் ஒப்பிட்டு விளாசிய விக்கி!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நரியுடன் ஒப்பிட்டு கருத்து வெளியிட்டுள்ளார் வடக்கு மாகாணசபை முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன்.

கிளிநொச்சிக்கு சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்தகாலங்களில் நடைபெற்ற சம்பவங்களை மறப்போம், மன்னிப்போம் என கருத்து வெளியிட்டிருந்தார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே வடக்கு முதல்வர் மேற்கண்டவாறு ஒப்பிட்டு பேசினார்.

” நரி வந்து புள்ளிமானிடம் கூறுகின்றது. உன் மகனைக் கொன்று உண்டவன் நான்தான். மன்னித்துவிடு. இனி நாங்கள் நண்பர்களாக இருப்போம். உன் மற்றைய குட்டிகளையும் என்னிடம் அனுப்பு.

நான் அவற்றிற்குப் பொறுப்பு. அவற்றையும் நான் கொன்று சாப்பிட்டால் மீண்டும் உன்னிடம் மன்னிப்புக் கேட்பேன். வருத்தப்படாதே. உன்னையும் உன் குட்டிகளையும் என் பிரதேசத்தினுள் வேண்டுவது போல என் கட்டுப்பாட்டில் உலாவிவர நான் உனக்கு பூரண உரித்துத் தருகின்றேன் என்று கூறுகிறது.

உண்மையைக் கண்டறியவிடாமல் பிரதம மந்திரி அவர்கள் தடுப்பது எமது உரிமைகளை மறுப்பதற்காக! எமக்குள்ள உரித்துகளை மறைப்பதற்காக! உலக நாடுகளின் பார்வை உண்மையைக் கண்டறிந்து விடும் என்ற பயத்தினால்! இதற்குத் துணைபோகத் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் துணிந்து விட்டார்கள்.

இதுகாறும் எம் மக்கள் பட்ட பாட்டை மறந்து ஆயுதமேந்த வேண்டிய காரணத்தை மறந்து, உயிர்த் தியாகங்கள் செய்ததை மறந்து, பிச்சைப் பாத்திரம் ஏந்தி பிச்சை எடுத்து எம்மக்களுக்குப் பிச்சைபோட முன்வந்துள்ளார்கள்.” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *