டிசம்பர் 07 இல் ஜனாதிபதித் தேர்தல்! தாமரை மொட்டில் கோட்டா; யானையில் கரு?
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் டிசெம்பர் 07ஆம் திகதி அல்லது அதற்கு முந்திய ஒரு சனிக்கிழமையில் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்கூட்டியே அதிபர் தேர்தலுக்கான அழைப்பை விடுக்காமல், தமது முழுப் பதவிக்காலமும் பதவியில் இருக்க முடிவு செய்தால், ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 09ஆம் திகதிக்கும் டிசெம்பர் 09ஆம் நாளுக்கும் இடையில் நடத்தப்பட வேண்டும்.
2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை ஒக்ரோபர் 22 ஆம் திகதி இறுதி செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது,
அன்றைய நாளில் தேர்தலுக்காக அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டால், குறைந்தபட்சம் அடுத்த நான்கு வாரங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
எனவே, டிசெம்பர் 07ஆம் திகதி சனிக்கிழமை அல்லது அதற்கு முந்திய ஒரு சனிக்கிழமையில் தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளது என்றும், தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அதேவேளை, மஹிந்த அணியிலிருந்து பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச களமிறக்கப்படவுள்ளார் என நம்பகரமாக அறியமுடிகின்றது.
தேர்தலில் களமிறங்குவதற்காக அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்குரிய ஆவணங்களையும் அவர் சமர்ப்பித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் சஜித் பிரேமதாச அல்லது கருஜயசூரிய களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.