பாப்பரசரை சந்திக்க பிரதமர் கோரவும் இல்லை அழைப்பும் இல்லையாம்!

பாப்பரசரை சந்திப்பதற்காக வத்திக்கானுக்கு விஜயம் செய்ய பிரதமர் எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லை எனவும், பிரதமருக்கு பாப்பரசரினால் எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லையெனவும், வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராரிசியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோர் இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தையே மேற்கொள்ளவுள்ளனர்.

இவ்விஜயத்தின்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும் பாப்பரசருக்கு தெளிவுபடுத்தப்படுமென அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்திருந்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (07) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

ஆயினும் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு, குறித்த சந்திப்பு தொடர்பில் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இத்தாலி பிரதமர் மற்றும் இத்தாலி மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக பிரதமரும் வெளிநாட்டு அமைச்சரும் விரைவில் இத்தாலியின் பொலோக்னாவுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

செப்டெம்பர் 06ஆம் திகதி, திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பிரதமரின் இத்தாலி விஜயத்தின் நோக்கத்தை வெளிநாட்டு அமைச்சர் தெளிவாக விவரித்தார். ஐரோப்பாவின் பழமையான கற்றல் தளமான பொலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் சர்வதேசக் கருத்தரங்கின் தொடக்க அமர்வில் இலங்கைப் பிரதமர் சிறப்புரை ஆற்றவுள்ளார்.

எந்த நிலையிலும், திருத்தந்தை பாப்பாண்டவரை தரிசிப்பதற்காக வத்திக்கானுக்கு விஜயம் செய்வதற்கு பிரதமர் எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லை அல்லது பிரதமருக்கு எந்தவித அழைப்பும் விடுக்கப்படவில்லை.

பொலோக்னாவில் நிகழ்வுகள் நிறைவடைந்ததன் பின்னர், பிரதமரும் வெளிநாட்டு அமைச்சரும் இத்தாலியிலிருந்து நாடு திரும்புவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *