பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளம் ஆயிரம் ரூபா வேண்டும்! – தமிழரசுக் கட்சி தீர்மானம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் எனக் கோரி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா எம்.பி. தலைமையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலைமை பற்றியும், தேசிய மாநாடு நடத்தும் தினம் பற்றியும் தீர்மானிக்கப்பட்டன. இதன்போதே மேற்படி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
“பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் எனக் கோரி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களுக்கு எமது ஆதரவைத் தெரிவிக்கின்றோம்.
நாளாந்த அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும்.
சம்பள அதிகரிப்பு தொடர்பாக தொழிற்சங்கங்களும் தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் ஓர் இணக்கத்துக்கு வரவேண்டும்” என்று தமிழரசுக் கட்சியினர் தமது தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளனர்.