அமெரிக்கா செல்கின்றன மன்னார் எலும்புக்கூடுகள்!
மன்னார் சதொச வளாகத்திலுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் இருந்து தெரிவு செய்து எடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் கார்பன் பரிசோதனைக்காக எதிர்வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை அமெரிக்காவுக்குச் கொண்டு செல்ல இருப்பதாக அகழ்வுப் பணிக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
குறித்த மனித எச்சங்களின் மாதிரிகளுடன் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸவும் அமெரிக்கா செல்லவுள்ளார்.
மேலும், அமெரிக்காவுக்கு ஆய்வுக்காக எடுத்துச் செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவரை இணைத்துக்கொள்ள மன்னார் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மன்னார் நீதிவான் நீதிமன்றத்தினூடாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
மன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணியானது 132 நாட்களுக்கு மேலாகத் தொடர்கின்றது.
இதுவரை குறித்த அகழ்வுப் பணிகளின்போது 300 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் 294 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 23 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.