கைதிகள் மீது தாக்குதல்: ஐ.நாவில் எதிரொலிப்பு!
அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள கைதிகள் தாக்கப்பட்ட காணொளி, சமீபத்தில் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட நிலையில், இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கவனத்துக்குக் கொண்டுச் செல்வதற்கான நடவடிக்கைகளை, சிறைக் கைதிகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பு முன்னெடுத்துள்ளது.
இந்தக் காணொளி வெளியிடப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள, இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையிலேயே, இது தொடர்பாக, ஐ.நா மனித உரிமை பேரவையின் கவனத்துக்கு இந்த விவகாரம் கொண்டுச் செல்லப்படவுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவை அமர்வுகளின்போது, இது தொடர்பாக முறையிட்டு கேள்வியெழுப்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த காணொளி விவகாரத்தையடுத்து, இத்தாக்குதலுக்கு, இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பில், கடந்த 2018ஆம் ஆண்டு சிறைச்சாலைக்குச் சென்ற மனித உரிமைகள் ஆணையகம், கைதிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென, சிறைச்சாலை தலைவரிடம் கோரிக்கைகளை முன்வைத்ததாகவும், எனினும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாத நிலையிலேயே தற்போது கண்டனம் வெளியிட்டுள்ளது.