புதிய அரசமைப்பை நிறைவேற்றுவோம்! – மிரட்டல்களுக்கு அடிபணியோம் என்கிறார் ரணில்

“புதிய அரசமைப்புக்கு எதிராகக் கூக்குரல் இடுபவர்கள் உத்தமர்கள் அல்லர். அவர்கள் இந்த நாட்டை நாசமாக்கியவர்கள். அவர்கள் கொலைகாரர்கள்; ஊழல்வாதிகள். குடும்ப ஆட்சிக்காக நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்து கடந்த காலங்களில் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். இப்படியானவர்களின் மிரட்டல்களுக்கு ஐக்கிய தேசிய முன்னணி அரசு அடிபணியாது. புதிய அரசமைப்பை நிறைவேற்றியே தீருவோம்.”

– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் சமகால அரசியல் நிலமைகள் தொடர்பில், சர்வதேச ஊடகம் ஒன்றின் இலங்கைச் செய்தியாளருக்கு வழங்கிய நேர்காணலிலேயே இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“அரசியல் சூழ்ச்சியை முறியடித்து நான் மீண்டும் பிரதமராகுவேன் என்று வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் நம்பினார்கள். அவர்களின் நம்பிக்கை வீண்போகவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேராதரவுடன் நான் மீண்டும் பிரதமரானேன். தமிழ் மக்களுக்கு என்றும் நன்றியுடையவனாகவே நான் இருக்கின்றேன். என்னை நம்பும் அவர்களை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன்.

இந்நாட்டில் மூவின மக்களும் சமவுரிமையுடன் சமாதானமாக – ஒற்றுமையாக வாழவேண்டுமெனில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இதைப் புதிய அரசமைப்பின் ஊடாகப் பெற்றுக்கொடுப்பேன். இது எனது பிரதான கடமை.

நான் மீண்டும் பிரதமராகி ஆற்றிய உரையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவேன். வாக்குறுதிகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்கமாட்டேன்.

நாட்டைப் பிளவுபடுத்தாமல் ஒருமித்த நாட்டுக்குள் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்குவோம். மீண்டும் ஒரு குடும்ப ஆட்சிக்கு – சர்வாதிகார ஆட்சிக்கு நாம் இடமளிக்கமாட்டோம்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *