குழப்பத்தில் குட்டியானைகள் – சமரசப்படுத்தும் பொறுப்பு கபீரிடம்! இன்று விசேட கூட்டம்
ஆளும் ஐக்கிய தேசிய முன்னணியின் பின்வரிசை எம்.பிக்களுக்கும், ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீமுக்குமிடையில் இன்று (10) முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றக்கட்டத்தொகுதியில் முற்பகல் 11 மணிக்கு இடம்பெறும் குறித்த சந்திப்பில் கட்டாயம் பங்கேற்குமாறு பின்வரிசை எம்.பிக்களுக்கு நேற்றுமுன்தினம் மாலையே அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றபோது அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவுக்கு எதிராக பின்வரிசை எம்.பிக்கள் போர்க்கொடி தூக்கினர்.அமைச்சுப்பதவியை உடன் துறக்குமாறு வலியுறுத்தியதுடன், அவருடன் கடும் சற்போரிலும் ஈடுபட்டனர். இதனால், நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது.
அத்துடன், பின்வரிசை எம்.பிக்கள் சிலர் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுகளை கோருவதால் ஆளுங்கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே நெருக்கடியை சமாளிப்பதற்காக பின்வரிசை எம்.பிக்களின் கோரிக்கைகளை உள்வாங்கி அது தொடர்பில் ஆராயும் பொறுப்பு கட்சிதவிசாளர் கபீரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கமையவே இன்றைய சந்திப்பு நடைபெறவுள்ளது. ஐ.தே.க. உட்பட ஆளுங்கட்சியின் அனைத்து பின்வரிசை எம்.பிக்களும் இதில் பங்கேற்கவுள்ளனர்.