தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 1000 அவசியம் – மஹிந்த அணியும் வலியுறுத்து!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்று மஹிந்த அணியும் வலியுறுத்தியுள்ளது.
ஹட்டனில் (07) இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே சி.பி. ரட்னாயக்க எம்.பி. இந்த வலியுறுத்தலை விடுத்தார்.
” மத்திய வங்கியையே கொள்ளையடித்த இந்த ஆட்சியாளர்கள் தொடர்பில் மக்களின் நிலைப்பாட்டை தேர்தல் ஊடாக அறிவதற்கு தயாராகவே இருக்கின்றோம்.
மஹிந்த ராஜபக்ச பிரதமராக தெரிவானபின்னர் முன்னெடுக்கப்பட்ட 55 நாட்கள் அரசியல் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
பலசுற்றுப்பேச்சுகள் நடத்தப்பட்டு, இறுதியில் 900 ரூபாவை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டது. அத்துடன், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன.
இவ்வாறானதொரு நிலையில்தான் நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து ஜனாதிபதி, புதிய பிரதமரை நியமித்தார். எனவே, புதிய அரசு குறித்து மக்களின் நிலைப்பாட்டை அறிய ஆவலாக உள்ளோம். விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும்.” என்றார்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம் கிருஸ்ணா