குண்டுகளுடன் வந்த தற்கொலைதாரியைத் தடுத்து நிறுத்திய ரமேஷ்! – பலரைக் காப்பாற்றி தன்னுயிரை அர்ப்பணித்தார்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் மீது தற்கொலைதாரி குண்டுத் தாக்குதல் மேற்கொண்டபோது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட நபர் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ரமேஷ் என்ற நபர் தொடர்பில் பி.பி.சி. உலக சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

உதிர்த்த ஞாயிறு தினமன்று காலையில் பெரிய பை ஒன்றுடன் தேவாலயத்துக்குள் நுழைந்த தற்கொலைக் குண்டுதாரியை ரமேஷ் என்பவர் தடுத்துள்ளார். இதன்போது தான் உயிர்த்த ஞாயிறு ஆராதனையைப் படம் பிடிக்க வேண்டும் என குண்டுதாரி தெரிவித்துள்ளார்.

பெரிய பையுடன் தேவாலயத்துக்குள் அனுமதிக்க முடியாது எனக் கூறி அவரை வெளியே நிற்குமாறு ரமேஷ் கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதனால் தற்கொலைக் குண்டுதாரிக்கு வெளியே நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேற்கொண்டு உள்ளே செல்ல முடியாத நிலையில் தற்கொலைதாரி அதிலேயே குண்டை வெடித்துச் சிதறியுள்ளார். இதன்போது சிறுவர்கள் உட்பட 28 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

தற்கொலைதாரி தேவாலயத்துக்குள் சென்று குண்டை வெடிக்க வைத்திருந்தாள் உயிரிழப்புகள் பல மடங்காக அதிகரித்திருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சந்தர்ப்பத்தில் தேவாலயத்துக்குள் பாரிய மக்கள் கூட்டம் இருந்துள்ளது.

நூற்றுக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றப்பட்டபோதும், தற்கொலைக் குண்டுதாரியை தடுத்து நிறுத்திய ரமேஷ் சம்பவத்தில் பலியாகியுள்ளார்.

ரமேஷ் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளைக் கைவிட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

ரமேஷின் மனைவி கிருஷாந்தினி ஞாயிறு பாடசாலை ஆசிரியராவார். 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கற்பித்து வருகின்றார். அவர் கற்பிக்கும் மாணவர்கள் பலர் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

அவரது பெற்றோர் இலங்கையில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டுள்ளனர். உறவினர்கள் சுனாமி பேரனர்த்தத்தின்போது உயிரிழந்துள்ளனர் என பி.பி.சி. தகவல் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *