பரபரப்புக்கு மத்தியில் சாவிக்கொத்துடன் இன்று சு.க. தலைமையகம் சென்றார் மைத்திரி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்துக்கு இன்று (02) திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
புத்தாண்டுக்கான கட்சிப் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்கும், கட்சியின் நிர்வாக மட்டத்திலான அதிகாரிகளை சந்திப்பதற்காகவுமே கொழும்பு, டார்லி வீதியில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்துக்கு ஜனாதிபதி சென்றார் எனக் கூறப்படுகின்றது.
உட்கட்சிபூசலால் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது மூன்று அணிகளாக பிளவுபட்டுள்ளன. இந்நிலையில் கட்சி தலைமையகத்தைக் கைப்பற்றுவதற்கு சந்திரிக்கா அம்மையார் தலைமையிலான குழுவொன்று முயற்சிப்பதாக கூறப்பட்டது.
இதனால், சு.கவின் தலைவரான ஜனாதிபதி நாட்டில் இல்லாதவேளை, கட்சி தலைமையகம் இழுத்துமூடப்பட்டிருந்தது. சாவிக்கொத்து மருதானை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஜனாதிபதி இன்று தலைமையகம் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.