சஜித்தின் பிறந்தநாளன்று வடக்கில் வீடமைப்பு திட்டம்!
வடக்கில் வெள்ள அனர்த்தத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு, வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும் என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் விவகார அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று (திங்கட்கிழமை) முற்பகல் சென்று சந்தித்த அமைச்சர், ஒருதொகுதி நிவாரணப் பொருட்களையும் கையளித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்-
”வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீட்டுப் பிரச்சினைகளை மிகவும் குறுகிய காலத்தில் தீர்த்துவைப்போம்.
வெள்ளத்தினால் வீடுகளை இழந்த மக்களுக்கு, முன்பிருந்ததைவிட பலமான வீடுகளை கட்யெழுப்பி, அவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக மாற்றுவோமென எனது சகோதர மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.
வீடுகளை இழந்த மக்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் செயற்பாடுகளை ஜனவரி 12ஆம் திகதி எனது பிறந்தநாளன்று கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் ஆரம்பிக்கவுள்ளோம்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் தற்பொழுதும் கணக்கெடுப்புகள் இடம்பெறுகின்றன. அந்த தகவல்கள் இன்னும் எங்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை.
ஆனாலும் தற்போதுவரை கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கு அமைய நாங்கள் முன்னோக்கிச் செல்லலாம். இந்த நிவாரண மற்றும் அபிவிருத்தி பயணத்தை சிறப்பாக கொண்டுசெல்வோம்” என குறிப்பிட்டார்.