வடக்கில் 74 ஆயிரம் பேர் அனர்த்தத்தால் பாதிப்பு!
வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், 23 ஆயிரத்து 54 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
என்று இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
3 ஆயிரத்து 698 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 310 பேர் இடர்பெயர்ந்து 39 இடைத்தங்கல் முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்திலேயே அதிகளவாக 39 ஆயிரத்து 932 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், யாழ்ப்பாண மாவட்டம் மருந்தங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 12 ஆயிரத்து 652 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணிவரையான நிலவரப்படி இடர் முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விவரம் குறிப்பிடப் பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 466 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 724 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 163 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 548 பேர் இடர்பெயர்ந்து 3 இடைத்தங்கல் முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 3 ஆயிரத்து 688 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 468 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஆயிரத்து 37 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 817 பேர் இடம்பெயர்ந்து 10 தற்காலிக முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 331 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 4 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 3 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 3 வீடுகள் முழுமையாகவும் 3 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் 2 ஆயிரத்து 778 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 724 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 436 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 428 பேர் 5 இடைத் தங்கல் முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கரைச்சிப் பிரதேசத்தில் வெள்ளத்தால் 20 வீடுகள் முழுமையாகவும் 98 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 7 ஆயிரத்து 520 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஆயிரத்து 929 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 75பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் 15 தற்காலிக முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கண்டாவளை பிரதேசத்தில் வெள்ளத்தால் 3 வீடுகள் முழுமையாகவும் 103 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
பச்சிளைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 819 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 100 குடும்பங்களைச் சேர்ந்த 347 பேர் 4 தற்காலிக முகாங்களில் தங்கவைக்கப்பட் டுள்ளனர்.
பச்சிளைப்பள்ளி பிரதேசத்தில் வெள்ளத்தால் 108 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 4 ஆயிரத்து 257 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 642 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் ஒரு தற்காலிய முகாமில் தங்கியுள்ளனர்.
கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர் பிரதேச செயலர் பிரிவில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஓர் இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ளனர்.
நானாட்டன் பிரதேச செயலர் பிரிவில் காற்றின் தாக்கத்தால் 12 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா
வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவில் 132 குடும்பங் களைச் சேர்ந்த 455 பேர் வெள்ள இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அந்தப் பிரதேசத்தில் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.