இறுதித் தீர்மானம் வரும் வரைக்கும் சம்பந்தனே எதிர்க்கட்சித் தலைவர்! – சுமந்திரன் விடாப்பிடி
“எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரம் தொடர்பில் இறுதித் தீர்மானம் வரும் வரைக்கும் அப்பதவியில் இரா.சம்பந்தனே தொடர்வார்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் இறுதித் தீர்மானம் இன்னமும் இல்லை. மஹிந்த ராஜபக்ஷவை எக்காரணம் கொண்டும் எதிர்க்கட்சித் தலைவராக ஏற்கவே முடியாது. நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஊடாகவே எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரத்துக்குத் தீர்வு காணப்பட வேண்டும். எமது எதிர்ப்புக்கள் தொடர்பான எழுத்துமூல ஆட்சேபனைகள் கிடைத்த பின்னர் இது தொடர்பான தனது தீர்மாத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். எனவே, இறுதித் தீர்மானம் வரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் தொடர்வார்” – என்றார்.