சம்பந்தனுக்கு புன்சிரிப்பு; சுமந்திரனுக்குக் கைலாகு! – சபையில் பெருந்தன்மையுடன் நடந்தார் மஹிந்த

நாடாளுமன்ற அமர்வு இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைப் பல தடவைகள் பார்த்து புன்முறுவலுடன் சிரித்த மஹிந்த ராஜபக்ஷ எம்.பி., கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு கைலாகு கொடுத்து அவருடன் சில விநாடிகள் சிரித்தவாறு உரையாடினார்.

பிரதமராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் நாடாளுமன்றம் இன்று முதன்முதலாகக் கூடியது.

சபை அமர்வு பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமான பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. அது தொடர்பில் விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது எதிரணி வரிசையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அருகில் அமர்ந்திருந்த மஹிந்த ராஜபக்ஷ எம்.பி., சம்பந்தனைப் பல தடவைகள் பார்த்து புன்முறுவலுடன் சிரித்தார். அவ்வேளைகளில் சம்பந்தனும் சிரித்தவாறு இருந்தார்.

பிற்பகல் 2.15 மணியளவில் இன்றைய நிகழ்ச்சி நிரலுக்கமைய, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் ஆரம்பமானது.

இதன்போது தனது சகாக்கள் சிலருடன் சபையை விட்டு மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. வெளியேறியபோது, சபையில் சம்பந்தனுக்குப் பின்னால் அமர்ந்திருந்த சுமந்திரன் எம்.பிக்கு சிரித்தவாறு கைலாகு கொடுத்தார். அத்துடன் சில விநாடிகள் சுமந்திரனின் கரங்களைப் பற்றியவாறு மஹிந்த உரையாடினார்.

இன்றைய சபை அமர்வில், மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டமைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து சுமந்திரன் எம்.பி. உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *